ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை!!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
3 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று, அங்கு ஏசு சபையின் அகதிகள் சேவை திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வந்தார். போரினால் பாதிக்கப்பட்ட அகதிகள் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வந்தார். இது அவர் மீது தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு ஹெராத் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சோகாதத் கிராமத்தில் போர் அகதிகளின் குழந்தைகளுக்காக ஏசு சபையின் சார்பில் நடத்தப்படுகிற பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக 2-6-2014 அன்று அலெக்ஸிஸ் பிரேம் குமார், ஆசிரியர்களுடன் சென்றார். அந்தப் பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டு விட்டு, அங்கிருந்து அவர் திரும்புவதற்கு தயார் ஆனார்.
அப்போது அங்கே வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் அலெக்ஸிஸ் பிரேம்குமாரை கடத்திச்சென்றனர்.
அவரை தீவிரவாதிகள் எங்கே கடத்திச் சென்று வைத்திருக்கிறார்கள்? அவரது கதி என்ன? என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தமிழ்நாட்டில் உள்ள அவரது குடும்பத்தினரையும், ஏசு சபையினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
அவரை உயிருடன் மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவு துறை அமைச்சகமும் தொடர்ந்து முயன்று வந்தன. இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் அவரை பத்திரமாக மீட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
Average Rating