நெல்லை அருகே அதிமுக பிரமுகர் மகளை காதலித்த கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு!!
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரை கீழதெருவை சேர்ந்த வெயிலுமுத்து மகன் ஊய்க்காட்டான் (வயது 24). கார் டிரைவரான இவர் இன்று காலை அங்குள்ள ஆற்றுக்கு நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென ஊய்க்காட்டானை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பல் துரத்தி சென்று ஊய்க்காட்டானை மடக்கி பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் ஊய்க்காட்டான் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவர் உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஊய்க்காட்டானை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஊய்க்காட்டானை அரிவாளால் வெட்டிய கும்பல் யாரென்று தெரியவில்லை. எதற்காக வெட்டினார்கள் என்றும் தெரியவில்லை. ஊய்க்காட்டான் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகளை காதலித்து வந்தாராம். இதற்கு அந்த பெண் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஊய்க்காட்டானை மர்மகும்பல் வெட்டியிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating