விராலிமலையில் போலி தங்ககட்டி மோசடி: ஆந்திர ஜோடி கைது!!
விராலிமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜூ, திருத்தம்மா ஆகிய 2 பேர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் நூறு கிராம் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர்.
இதை நம்பிய சக்திவேல் நேற்று அவர்களிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்து தங்க கட்டி ஒன்று வாங்கி உள்ளார். பின்னர் அது சுத்த தங்கம் தானா என அவர் சோதித்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்க கட்டி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விராலிமலை போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை விராலிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் கோரிமேடு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஆந்திர ஜோடியை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர்கள் என்பதும், தங்க முலாம் பூசிய போலி தங்க கட்டிகளை ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆந்திர ஜோடியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 கிராம் தங்கம் மற்றும் ஏராளமான போலி தங்க கட்டிகளை கைப்பற்றினர். இச்சம்பவம் விராலிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating