செங்கோட்டை அருகே மர்மமாக இறந்த வாலிபர்: உடல் தோண்டி எடுப்பு!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி. இவரது மகன் காதர்முகைதீன் (வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கணவன் –மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து காதர் முகைதீன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 18–ந்தேதி காதர்முகைதீன் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் அவர் இறந்தது குறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
இதையறிந்த பண்பொழி கிராம நிர்வாக அதிகாரி இசக்கி கண்ணு, அச்சம்புதூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் காதர்முகைதீன் சாவில் மர்மம் உள்ளது, எனவே அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதர் முகைதீன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதர் முகைதீனுக்கும், அவரது தந்தை நாகூர்கனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகராறில் நாகூர்கனி, காதர் முகைதீனுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு அவரது உடலை புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து நாகூர்கனியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காதர்முகைதீன் உடல் இன்று மாலை வருவாய் துறையினர், தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட உள்ளது. பின்னர் அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்கின்றனர். பிரேத பரிசோதனையில் தான் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும்.
Average Rating