திருக்கோவிலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை!!
திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மகள் வளர்மதி (வயது 40). உடல் ஊனமுற்றவரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அங்குள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம் பக்கத்தினர் உதவி செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் வளர்மதியின் வீட்டு வாசல் பெருக்கி சுத்தப்படுத்தாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் வளர்மதியின் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்டு வளர்மதி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். வளர்மதியின் விரல்களும் துண்டிக்கப்பட்டு கிடந்தது. அரிவாளால் வெட்டும்போது வளர்மதி தடுக்க முயன்றதால் அவரது விரல்கள் துண்டாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் குணபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நகை–பணம் கொள்ளை போகவில்லை.
வளர்மதி அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் பணம், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. எனவே சொத்து தகராறு காரணமாகவோ அல்லது கற்பழிக்கும் முயற்சியிலோ இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கொலையாளிகள் உள்ளூரை சேர்ந்தவர்களாகவே இருக்கலாம் என போலீசார் எண்ணுகிறார்கள். தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Average Rating