வங்கியில் உதவி செய்வது போல் நடித்து விவசாயிடம் திருட்டு: கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலங்கியது!!
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் முனியன் (வயது 62), விவசாயி. இவர் சம்பவத்தன்று பெண்ணாடத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை எடுத்து வர சென்றார். வங்கி படிவத்தில் தொகை விவரத்தை பூர்த்தி செய்ய தெரியாமல் தவித்து நின்றபோது அருகில் இருந்த ஒரு டிப்–டாப் ஆசாமி முனியனை அணுகி படிவத்தை பூர்த்தி செய்து தருவதாக கூறினார்.
இதனை நம்பிய முனியன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 23 ஆயிரத்தை எடுத்து கொடுக்குமாறு கூறினார். வங்கியில் பணம் எடுக்கும் வரை அருகிலேயே நின்றிருந்த அந்த டிப்–டாப் ஆசாமி, முனியனிடம் இருந்து பணத்தை வாங்கி எண்ணி பத்திரமாக எடுத்து செல்லுமாறு ஒரு பாலீதீன் பையில் வைத்து கொடுத்தார்.
வங்கியில் இருந்து சிறிது தூரம் வந்து பார்த்தபோது பணத்தை காணாமல் முனியன் அதிர்ச்சி அடைந்தார். டிப்–டாப் ஆசாமி அந்த பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முனியன் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் விசாரணை மேற்கொண்டபோது முனியனிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமி பற்றி அடையாளம் தெரிந்தது. அவனை தேடி வந்தனர். இந்த நிலையில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவன் வடலூரை சேர்ந்த சிவக்குமார் (45) என்பது தெரியவந்தது. சிவக்குமாரை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவன் இதுபோன்று வங்கியில் பணம் எடுக்க வருபவர்களிடம் உதவி செய்வது போல் நடித்து பலரிடம் பணத்தை திருடி இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating