அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது!!
அரசு ஆவணம் திருடிய வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், இணைய தளம், பத்திரிகைகள் போன்றவற்றுக்கும் விற்பனை செய்து வந்து ஊழலில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது.
முன்னாள் பத்திரிகையாளரான சைக்கியா, பெட்ரோலியத்துறை ஊழியர்கள், கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள், புரோக்கர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய லோகேஷ்சர்மா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் நொய்டாவில் ஆலோசனை நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர்கள் மீது அரசு அலுவலகங்களில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை திருடுதல், குற்றச்சதி, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று கைதான லோகேஷிடம் இருந்து நிலக்கரி, எரிசக்தி, அமைச்சக ஆவணங்களும் இந்த துறைகளில் பணிபுரிவது போன்ற போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவரது தந்தை மத்திய அரசு துறையில் டிரைவராக பணிபுரிந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி லோகேஷ் ஆவண திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ராணுவ அமைச்சகம் உள்பட மேலும் சில மத்திய அரசு அமைச்சக அலுவலகங்களிலும் ஆவண திருட்டு நடந்து இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இன்று ஆவண திருட்டு வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் வீரேந்தர். ராணுவ அமைச்சகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
ராணுவ அமைச்சக ஊழியர் சிக்கியிருப்பதன் மூலம் ராணுவ ரகசியங்களும் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்புகிறது.
Average Rating