கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது!!
கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள பாவச்சம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.
மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அந்த பெண்ணுக்கு சிறுநீரகம் தானம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பத்தனம்திட்டா அருகே உள்ள பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் (வயது 40) என்பவர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டார். சிறுநீரகம் தானமாக கிடைக்க தான் ஏற்பாடு செய்வதாக கூறிய அந்த வாலிபர் அதற்காக ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுச் சென்று பல நாட்கள் ஆகியும் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
மேலும் அவர் கொடுத்த செல்போன் நம்பர், முகவரி மூலம் அவரை தொடர்பு கொண்ட போது அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாறசாலை போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதில், மாற்று சிறுநீரகம் பெற்றுத்தருவதாக கூறி ஸ்ரீகுமார் தன்னிடம் ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். இதுபற்றி பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகுமாரை தேடி வந்தனர். அவர் திருவல்லா பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று ஸ்ரீ குமாரை கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அங்கு 2 மன நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுபற்றி ஸ்ரீகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் அந்த மனநோயாளிகளை கடத்தி உடல் உறுப்புகளை திருடி விற்கும் கும்பலிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ குமாரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு பின்னணியில் உள்ள கும்பல் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Average Rating