திருப்பூரில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை கல்லால் தாக்கிய போதை வாலிபர்கள்!!
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் குமரவேல். இவர் நேற்று நள்ளிரவு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அவினாசி ரோடு சக்தி தியேட்டர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ரோட்டில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று குமரவேல் விசாரித்த போது தகராறில் ஈடுபட்டனர். 2 பேரையும் குமரவேல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
மதுபோதையில் 2 பேரும் தள்ளாடியபடி நடந்து வந்தனர். இதனால் போலீஸ் ஏட்டு குமரவேலின் மோட்டார் சைக்கிள் சரிந்தது. அவரது வாக்கி டாக்கி கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வாக்கி டாக்கியை எடுக்க கீழே குனிந்தார்.
இதை பயன்படுத்திக் கொண்டு போதை வாலிபர்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து ஏட்டு குமரவேலுவை சரமாரியாக தாக்கினார். அடிதாங்க முடியாமல் குமரவேல் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
பொதுமக்களை கண்டதும் போதை வாலிபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து ஏட்டு குமரவேல் தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஏட்டு குமரவேலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போதை வாலிபரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்தது. அவரது பெயர் குமார் என்று அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீசார் குமாரையும், அவரது கூட்டாளியையும் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating