எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 9–ம் வகுப்பு படித்து வரும் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள வடக்குசெமபுதூரை சேர்ந்த சண்முகராஜ் மகன் கருப்பசாமி (18) என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், வடக்கு செமபுதூரில் பள்ளி மாணவிக்கும் கட்டிட தொழிலாளியான ஒருவருக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து தாசில்தார் ஜெகநாதன், வருவாய் ஆய்வாளர் திரவியம், கிராம நிர்வாக அலுவலர் அலெக்ஸ்சாண்டர், கிராம உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் வடக்குசெமபுதூரில் உள்ள கருப்பசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு இருவீட்டாரையும் வரவழைத்து மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையின் வயது சான்றிதழை சரிபார்த்தனர்.
அப்போது மணப்பெண்ணுக்கு 14 வயதே என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் இருவீட்டாரிடமும் இந்த திருமணம் சட்டப்படி செல்லாது. மீறி திருமணம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மணப்பெண்ணுக்கு 18 வயது எட்டியவுடன் திருமணத்தை நடத்துங்கள் என்று கூறினர்.
இதற்கு சம்மதம் தெரிவித்த இருவீட்டாரும் மணப்பெண்ணுக்கு 18 வயது எட்டியவுடன் திருமணத்தை நடத்தி கொள்கிறோம் என எழுத்துபூர்வமாக அதிகாரிகளிடம் எழுதி கொடுத்தனர். இதையடுத்து நாளை பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating