சொத்தை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வியாபாரி!!
தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் மகன் ராஜா (வயது 61). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்.
பின்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி பன் ரொட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு பெண் உள்ளார்.
மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ராஜாவின் பெற்றோர், சகோதர, சகோதரிகள் சொத்தில் பங்கு தர மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்அமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கடந்த மாதம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் உள்ள சுமார் 200 அடி உயரமுள்ள மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் செய்தார்.
பின்னர் அவரை சமாதானம் செய்து போலீசார் மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜா உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரில் உள்ள செல்போன் டவரில் மண்வெட்டியுடன் ஏறி 2–வது முறையாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது டவரின் மேலிருந்து அவ்வப்போது ஒரு பேப்பரில் தன்னுடைய கோரிக்கைகளை எழுதிப் போட்டுக் கொண்டே இருந்தார்.
அந்தப் பேப்பரில் ‘நான் யாருடைய சொத்திற்கும் ஆசைப்படவில்லை எனக்கு சேர வேண்டிய சொத்தைத்தான் நான் கேட்கிறேன். இனிமேல் உங்கள் வாக்குறுதியை நம்ப முடியாது. எனவே எனது பெற்றோரையும், சகோதர, சகோதரிகளை அழைத்து வந்தால் தான், நான் கீழே இறங்குவேன்’ என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ராஜாவை கீழே இறங்கி வரும்படி போலீசார் ஒலி பெருக்கி மூலம் போலீசார் பல முறை கேட்டுக் கொண்டனர். ‘என்னை யாரும் காப்பாற்ற வரக்கூடாது. அதையும் மீறி யாராவது மேலே ஏறிவந்தால், நான் வைத்திருக்கும் மண் வெட்டியால் வெட்டி விடுவேன்’ என மிரட்டல் விடுத்தார்.
அதைத்தொடர்ந்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் என்ன செய்வது என்று புரியாமல், பொதுமக்களைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். முடிவில் இரவு வெகுநேரம் வரை ராஜா செல்போன் டவரில் இருந்து கிழே இறங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Average Rating