மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேர் கொன்று புதைப்பு: உடல்களை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை!!
மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேரை கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் குக்கிராமமான மிரிக்ரே கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்கள். இதுகுறித்து அவர்களில் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கிராமத்தை சேர்ந்த சுமார் 60 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது, காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாஜிஸ்திரேட், இரண்டு டாக்டர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர், வயதான பெண் உள்ளிட்ட இந்த 5 பேரின் கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தன. அவர்களின் உடல்களில் கடுமையான காயங்கள் இருந்தன. இதனால், சூனியம் வைத்ததாக கூறி சித்ரவதை செய்து அவர்களை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Average Rating