7 மாத கர்ப்பிணிக்கு இதய அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!!
தனியார் மருத்துவமனையில் மட்டுமே தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை மாற்றியமைக்கும் வகையில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் நிர்மலா. ஏழு மாத சிசுவை வயிற்றில் சுமந்த இவர் திடீர் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த ஜனவரி மாதம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இதய வால்வு சுருங்கியிருப்பது தெரிய வந்தது.
உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நிர்மலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடுமென அஞ்சிய அவரது குடும்பத்தினர் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர். ஆனால், நிர்மலாவின் உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து மீண்டும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்த அரசு மருத்துவர் குழுவிற்கு முன் இருந்த மிகப்பெரிய சவால் வயிற்றிலிருக்கும் சிசுவிற்கு மிகச் சிறிய அளவிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தாத அளவிற்கு மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதே. இருப்பினும், பெரும் போராட்டத்திற்கிடையே அரசு மருத்துவர் குழு வெற்றிகரமாக இந்த இதய அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தது.
தற்போது பூரண குணமடைந்து வரும் நிர்மலா இன்னும் சில தினங்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Average Rating