அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்!!
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக ஊழியர்கள் அரசின் ஆவணங்களை திருடி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பட்ஜெட் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒரு இணையதளத்தில் வெளியானது பற்றி விசாரணை நடத்தியதில் இந்த ஆவண திருட்டு அம்பலமானது. இதையடுத்து பெட்ரோலியத்துறை ஊழியர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், புரோக்கர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே ஆவண திருட்டு வழக்கில் இன்று காலை மேலும் 2 மத்திய அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இணை செயலாளரின் தனி செயலாளராக பணியாற்றி வந்த ஜிதேந்தர் நாக்பால், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினரின் தனி உதவியாளராக பணிபுரிந்து வரும் விபன் குமார் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு போலீஸ் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
Average Rating