வியாபாரியை கொல்ல முயற்சி: பாட்ஷா மகன் உள்பட 2 பேர் கைது!!
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற அல்–உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா மகன் சித்திக் அலி (வயது 37). இவரும் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்.
இவரும் குனியமுத்தூரை சேர்ந்த அஸ்ரப் அலி (35) என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு வியாபாரம் செய்தனர். அப்போது இவர்களுடன் குனியமுத்தூரை சேர்ந்த சண்முகம் (50) என்பவரும் வியாபார தொடர்பு வைத்திருந்தார்.
இவரிடம் சித்திக் அலி, வெள்ளை அஸ்ரப் ஆகியோர் வியாபாரத்துக்காக பணம் கேட்டுள்ளனர். சண்முகம் பணம் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக் அலி, வெள்ளை அஸ்ரப் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் சண்முகத்தை அரிவாளால் வெட்டினர்.
இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரும் சரவணம்பட்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சித்திக் அலி மீது கோவையை சேர்ந்த காதல் திருமணம் செய்த தொழில் அதிபர் மகளை கணவரிடமிருந்து மிரட்டி பிரிக்க முயன்றதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் சித்திக் அலியை தேடி வந்தபோது அவர் தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.
Average Rating