சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ பரவி வந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அந்த வீடியோவில் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இவர், தனது 15-ம் வயதில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டவர். தற்போது, ‘பிரஜ்வாலா‘ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் குழந்தைகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராக இவர் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு வீடியோ காட்சிகள், இவரது ‘வாட்ஸ் அப்’பிற்கு வந்தன. அவற்றை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோவில் 5 பேர் கொண்ட கும்பல், இரு இளம்பெண்களை கற்பழிக்கும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. இளம்பெண்ணை மிரட்டுவதற்காக, அந்த கும்பலே அதை படம் பிடித்து இருப்பது போல் தெரிந்தது.
ஒரு படம், 8 நிமிடங்களும், மற்றொரு படம் 4 நிமிடங்களும் கொண்டது. அந்த கும்பல் கைது செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய சுனிதா கிருஷ்ணன், கடந்த 5-ம் தேதி அந்த இரண்டு வீடியோக்களையும் ‘யூ டியூபில்‘ வெளியிட்டு அதில் தெரியும் கொடூரர்களை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த வீடியோவை யூ-டியூப் தனது தளத்திலிருந்து நீக்கிவிட்டது.
இந்நிலையில் திரைப்பட இயக்குனரான தனது கணவரின் மூலம் அந்த வீடியோவை எடிட் செய்து அந்த கொடூரர்களின் முகத்தை வட்டக்குறிக்குள் அடைத்து எளிதில் அடையாளம் காணும் வண்ணம் மீண்டும் அந்த வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவின் விளைவாக தற்போது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating