இந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்!!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கிய கொடிய நோய் எபோலா. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்நோயால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதார மந்திரி நட்டா இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று அவர் பாராளுமன்றத்தில் பேசுகையில், “எபோலாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளை 7 சர்வதேச விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்காக சிறப்பு மருத்துவர் குழு அந்தந்த விமான நிலையங்களில் முகாமிட்டிருந்தது. இதன் மூலம் 50157 பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு சிலருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேநேரம் எபோலாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமடைந்ததாக கருதப்பட்ட லைபீரியாவிலிருந்து வந்த நபருக்கு இந்த சோதனை முகாமில் எபோலா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விமான சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
பூனேவில் உள்ள தேசிய நோய் தடுப்பு மையத்தில் சந்தேகத்திற்கிடமான 100 நோயாளிகளின் சோதனை நடைபெற்றதாகவும் அதில் ஒருவருக்கும் எபோலா பாதிப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் உலகையே அச்சுறுத்திய எபோலாவிலிருந்து இந்தியா தப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating