திருப்பதியில் காணிக்கை தலைமுடியை இறக்கும்போது ரத்தக்காயம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
காணிக்கை தலைமுடியை இறக்கும் போது, பலருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படுவதாகவும், பிளேடுகள் தரமாக இல்லை என்றும் கூறி கல்யாண கட்டா ஊழியர்களிடம் பக்தர்கள் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக பக்தர்கள், திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமும் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் காணிக்கை தலைமுடியை இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பிளேடுகளை பரிசோதனை செய்தபோது, அவைகள், தரமானதாக இல்லை என கண்டறியப்பட்டது. தரமற்ற பிளேடுகளை பயன்படுத்தி வந்ததால் தான், காணிக்கை தலைமுடியை இறக்கும்போது, பக்தர்களின் தலையில் ரத்த காயம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தரமான பிளேடுகளை கொள்முதல் செய்வதற்கு, திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். அதற்காக திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, முதன்மை என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி ஆகியோர் கொண்ட தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் ஆலோசனை படி நல்ல தரமான பிளேடுகளை கொள்முதல் செய்ய, அடுத்த மாதம் (மார்ச்) 12–ந்தேதி டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டர் மூலம் ஒரு ஆண்டுக்கு தேவையான தரமான பிளேடுகளை, இடைத்தரகர் இன்றி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating