மற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வளையமாபுரம் காலனி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகள் ராஜலட்சுமி (21) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார்.
கடந்த 22–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் கடந்த 24–ந்தேதி காலை அவரை காணவில்லை என பெற்றோர்கள் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதே நேரத்தில் வளையமாபுரத்தை அடுத்துள்ள பண்டசோழ நல்லூர் செல்வராஜ் தென்னந்தோப்பில் ராஜலெட்சுமி பிணமாக கிடந்தார்.
பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே பாபநாசம் டி.எஸ்.பி. செல்வராஜ் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே ராஜலெட்சுமியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை அறிய தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.
அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில் குளக்குடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (23) பலமுறை ராஜலெட்சுமியுடன் பேசி வந்தது தெரியவந்தது. அவர் சென்னைக்கு கொத்தனார் வேலைக்கு சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சென்னை சென்ற வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர் சாய்பாபா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் குளக்குடி முருகனை பிடித்து வலங்கைமான் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர் ராஜலெட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். முருகன் போலீசாரிடம் கூறியதாவது:–
ராஜலெட்சுமியை 3 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். அவர் சில மாதங்களாக மற்ற ஆண்களுடன் பேசுவது பிடிக்கவில்லை. அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். நாங்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு வரசொல்லி பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து நான் துண்டை முறுக்கி கழுத்தை சுற்றி இறுக்கி கொலை செய்தேன். பின்னர் சென்னைக்கு சென்றுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Average Rating