ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!
குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் கிரேசி (வயது 48).
இவர் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டாராம்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 2 வாலிபர்கள் இவரது வீட்டு கதவை தட்டி உள்ளனர். சத்தம் கேட்டு அங்கு வந்த கிரேசியிடம் வீட்டில் உள்ள ‘வாட்டர் பில்டரை’ சுத்தம் செய்ய வேண்டும் என்றனர். அதற்கு கிரேசி வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லை, அவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி அவர்களை அனுப்பி விட்டாராம்.
நேற்று மாலையும் அதே வாலிபர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்த நிலையில் அங்கு வந்து கிரேசியிடம் உங்கள் வீட்டு உரிமையாளரிடம் பேசி விட்டோம், அவர் தான் எங்களை வரச் சொன்னார், கதவை திறங்கள் என கூறி உள்ளனர். என்றாலும் கிரேசி கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் திடீரென கிரேசியை கீழே தள்ளி விட்டு வீட்டுக்குள் நுழைந்தனர்.
அதன்பிறகும் ஆத்திரம் தீராத வாலிபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் கிரேசி கழுத்திலும், கையிலும் சரமாரியாக குத்தினர். இதனால் கிரேசி அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் அவரை கத்தியால் குத்திய வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். பின்னர் கிரேசி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கிரேசியிடம் விசாரணை நடத்தினர். கிரேசியை கத்தியால் குத்திய வாலிபர்கள் யார்? எதற்காக குத்தினார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating