நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா(வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(21). இவர் கோவையில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.
பக்கத்து வீடு என்பதால் கார்த்திகா–கார்த்திகேயன் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 5 ஆண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரியவரவே கார்த்திகா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கார்த்திகேயனுக்கு கார்த்திகாவை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால் கார்த்திகாவின் பெற்றோர் வரன் பார்க்கும் படலத்தை தொடங்கினர். வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர்.
இருப்பினும் கார்த்திகாவை திருமணம் செய்வது என்ற முடிவில் கார்த்திகேயன் உறுதியாக இருந்தார். தனது திட்டப்படி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த கார்த்திகாவை காரில் கடத்திச் சென்றார்.
இந்த தகவல் அறிந்த கார்த்திகாவின் பெற்றோர் பதறிப்போனார்கள். ‘தங்கள் மகளை கார்த்திகேயன் கடத்திச்சென்று விட்டார்’ என்று நெகமம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகாவை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் கார்த்திகாவை கடத்திச்சென்ற கார் பழுதாகி கோதவாடி அருகே நிற்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காரில் இருந்த கார்த்திகா, கார்த்திகேயன், கார்த்திகேயனின் தம்பி விக்னேஷ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு கார்த்திகாவின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர்.
போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் கார்த்திகா தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். எனவே அவரை போலீசார் பெற்றோருடன் அனுப்பிவிட்டனர்.
கார்த்திகேயன், அவரது தம்பி விக்னேஷ் ஆகியோர் மீது இளம்பெண்ணை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கார்த்திகா கடத்தல் சம்பவத்தில் கார்த்திகேயனுக்கு ஒருவர் உதவியுள்ளார். தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Average Rating