மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது சின்னமுளையூர். நேற்று முன்தினம் இவ்வூரை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் சாலையோரம் இட்லி வியாபாரம் செய்யும் வெள்ளையம்மாளிடம்(வயது60) பணியாரம் வாங்கி சாப்பிட்டனர். மாணவர் ஒருவர் வாங்கிய பணியாரத்தில் பல்லி இறந்து கிடந்தது. இந்த தகவல் பரவவே வெள்ளையம்மாளிடம் பணியாரம் வாங்கி சாப்பிட்டவர்களுக்கு அருவெறுப்பு ஏற்பட்டது.
சிலர் வாந்தி எடுத்து மயங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட 26 மாணவ–மாணவிகள் உள்பட 44 பேர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கவனக்குறைவாக பல்லி விழுந்த மாவில் பணியாரம் சுட்டு விற்பனை செய்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளையம்மாளை நத்தம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
வெள்ளைம்மாள் அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பலகாரம் சுட்டு விற்பனை செய்து வருகிறார். கணவர் இல்லை. உறவினர்கள் ஆதரவும் இல்லாததால் அவரை உடனடியாக ஜாமீனில் விட்டுவிட்டோம் என்றனர்.
Average Rating