தாமரையுடன் வாழ பிடிக்கவில்லை- கணவர்!!
திரைப்பட பின்னணி பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு திருடனை போல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
சூளைமேடு முல்லை தெருவில் உள்ள தியாகு வீட்டு முன்பு நேற்று மகனுடன் தர்ணா போராட்டமும் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மனித உரிமை போராளியாகவும், தமிழ் தேசியவாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட என் கணவர் தியாகு மீண்டும் வீட்டுக்கு வரவேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை தர்ணா போராட்டம் தொடரும் என்றும் அறிவித்து உள்ளார்.
தாமரை குற்றச்சாட்டுக்கு தியாகு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. வேளச்சேரியில் உள்ள மகள் வீட்டில் தங்கி இருக்கிறேன். டெலிவிஷன்களில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறேன். கடந்த நவம்பர் 23–ந் தேதியில் இருந்து தாமரையுடன் நான் வாழவில்லை என்பது உண்மை தான்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே எங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருந்தது. கருத்து வேறுபாட்டுடன் இருந்தோம். இருவரும் பிரிந்து விடுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதினேன். இதை கடிதம் மூலம் தாமரையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் பதில் சொல்லவில்லை.
சட்ட ரீதியாக பிரிந்து விடலாம் என பல தடவை வற்புறுத்தியும் அவர் சம்மதிக்கவில்லை. தாமரை சிறந்த கவிஞர். நல்ல சிந்தனைவாதி. ஆனால் எனது குடும்ப வாழ்க்கை என்பது பொது வாழ்க்கைக்குள் உட்பட்டது. தாமரை அப்படி பார்ப்பது இல்லை. அது தான் பிரச்சனை.
தாமரை வெளியிட்டுள்ள அறிக்கைகள் சேர்ந்து வாழ்வதற்கான வழி இல்லை. மகனை பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. தாமரையும், நானும் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து செய்து கொள்வது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு தியாகு கூறினார்.
Average Rating