என்ஜினீயரிங் மாணவிக்கு கொலை மிரட்டல்: பனியன் தொழிலாளி மீது வழக்கு!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள தொட்டிபாளையம் மணியகாரம் தோட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் காங்கயத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக தொட்டி பாளையத்தில் இருந்து பஸ்சில் சென்று முத்தூரில் இறங்குவார். அங்கிருந்து கல்லூரிக்கு கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் செல்லும்போது அந்த பஸ்சில் கொடுமுடியை சேர்ந்த பனியன் தொழிலாளி சரவணன் (33) என்பவரும் பயணம் செய்தார்.
அவர் நிர்மலாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது அவரை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து வந்தார். அடிக்கடி நிர்மலாவின் வீட்டுக்கு அருகே வந்து சரவணன் காதலிக்க வற்புறுத்தினார்.
நாளுக்கு நாள் சரவணனின் தொல்லை அதிகரிக்கவே இதுகுறித்து நிர்மலா வீட்டில் தெரிவித்தார். அவர்கள் சரவணனை எச்சரித்தனர். ஆனால் சரவணன் தொடர்ந்து நிர்மலாவுக்கு காதல் தொல்லை கொடுத்தார். ஒருகட்டத்தில் காதலிக்கவில்லை எனில் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சரவணன் திருவண்ணாமலை மாவட்டம் பாரியூரை சேர்ந்தவர் என்பதும் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக கொடுமுடியில் வீடு எடுத்து தங்கியிருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating