திருத்தணியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்!!
திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது 17 வயது மகள் நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கும் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுகுமார் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று காலையில் இவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். தடபுடல் விருந்தும் நடந்தது.
இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடப்பதாக திருவள்ளூர் சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் திருத்தணி போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீசாரும், சைல்டுலைன் அமைப்பினரும் திருமண மண்டபத்துக்கு விரைந்து சென்றனர்.
சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். சிறுமியின் பள்ளி சான்றிதழையும் வாங்கி பார்த்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது.
இதையடுத்து திருமணத்தை நிறுத்துமாறு போலீசார் கூறினார்கள். அதற்கு மணமக்களின் பெற்றோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் திருமணத்தை நிறுத்தாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டது.
Average Rating