வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: மலேசியாவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை பெண் கண்ணீர்!!
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது40). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் முதியோர் இல்லத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார்.
பின்னர் கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணத்தை வாங்கி கொண்டு சுற்றுலா விசாவில் ராமலட்சுமியை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் மலேசியா சென்ற ராமலட்சுமியை வீட்டு வேலைக்கு அங்குள்ள ஒருவரிடம் விற்றுள்ளனர். அங்கு அவரை வீட்டு சிறையில் வைத்து வேலை வாங்கி உள்ளனர். அவருக்கு சம்பள பணத்தை தராமால் அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கி உள்ளனர். இதுகுறித்து அவர் இந்தியாவில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை இயக்கம் மூலம் இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்படி அவனியாபுரம் போலீசார் ராஜலட்சுமியை மலேசியாவிற்கு அனுப்பிய ஏஜெண்டை பிடித்து விசாரித்து மலேசியாவில் இருந்து ராமலட்சுமியை 4 மாதங்களுக்கு பின்னர் மீட்டனர்.
ஊர் திரும்பிய ராமலட்சுமி கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ரூ.15 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் தான் நான் மலேசியா சென்றேன். அங்கு என்னை அடித்து, உதைத்து வேலை வாங்கினர். மேலும் என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினால்,
ரூ.1 லட்சம் விலை கொடுத்து உன்னை வாங்கி உள்ளோம். பிரச்சனை செய்தால் கொன்று விடுவோம் என மிரட்டினார்கள். பின்னர் போலீசார் மற்றும் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை எடுத்த முயற்சியால் உயிருடன் மீண்டு வந்துள்ளேன்.
என்னை போலவே பாக்கியலட்சுமி (28), வனிதா (26) ஆகிய 2 பெண்கள் அங்கு பல்வேறு சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். இதுபோல் ஏராளமான பெண்கள் மலேசியாவில் சிக்கித்தவிக்கின்றனர் என்றார்.
Average Rating