திருவாடானையில் விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் நகையை பறித்த பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்து உள்ளது.
இந்த நிலையில் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் லாவண்யா, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். திருமணத்தின் போது 25 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
அந்தப்பொருட்களை திரும்ப பெற்றுத்தரக்கோரி லாவண்யா, கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணனிடம் புகார் மனு கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில், திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் வேலம்மாள், லாவண்யாவையும், அவரது கணவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிரியை லாவண்யா அணிந்து இருந்த தாலி செயினை, கழற்றி கொடுக்குமாறு எஸ்.ஐ. வேலம்மாள் கேட்டுள்ளார். அதை தரமறுத்த லாவண்யாவை, பெண் எஸ்.ஐ. வேலம்மாள் தரக்குறைவாக பேசி தாலி செயின் மற்றும் மோதிரத்தை பறித்துக்கொண்டார்.
இதுகுறித்து லாவண்யா, ராமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரையிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், திருவாடானை போலீஸ் டி.எஸ்.பி. சேகர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை நடத்திய விசாரணையிலும், பெண் எஸ்.ஐ.வேலம்மாள் லாவண்யாவின் தாலி செயினை பறித்துக்கொண்டதும், தரக்குறைவாக பேசியதும் உண்மைதான் என்று கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெண் எஸ்.ஐ. வேலம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, எஸ்.பி. மயில்வாகணனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம், பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக பேசி நகையை பறித்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகாருக்குள்ளான பெண் எஸ்.ஐ. வேலம்மாள், ஏற்கனவே 8 முறை குற்ற குறிப்பாணை (மெமோ) பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating