ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை- திருடியதற்கு 7 ஆண்டு சிறை!!
வெள்ளகோவில் அருகே உள்ளது காடையூரான் வலசு. இங்குள்ள செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி கவுண்டர் (வயது 75). இவரது 2–வது மனைவி சாந்தாமணி (50), சாந்தாமணியின் தாயார் ராமத்தாள் (75) ஆகியோர் கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1–ந்தேதி இரவு 8.30 மணிக்கு வீட்டில் இருந்தனர்.
அப்போது காட்டுப்பாளையத்தை சேர்ந்த சங்கர் (45) என்ற தங்கபிள்ளை அங்கு வந்தார். இவர் பெரியசாமி கவுண்டரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
தனக்கு தற்போது வாழைக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டு தோட்டத்துக்கு பெரியசாமி கவுண்டரை சங்கர் அழைத்துச் சென்றார். அங்கு அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் வீட்டுக்கு முன் அமர்ந்து இருந்த சாந்தாமணி, ராமாத்தாள் ஆகியோரை வெட்டி கொன்றார். பின்னர் 6 பவுன் தாலி சங்கிலி, பட்டுப்புடவை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தார்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் சங்கரை கைது செய்து தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு வக்கீலாக ஆனந்தன் வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி சரவண பெருமாள் இன்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளதால் சங்கருக்கு ஒவ்வொரு கொலைக்கும் ஒரு ஆயுள் தண்டனை என வீதம் 3 ஆயுள் தண்டனையும், 3 கொலைக்காக ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தும் அபராதத் தொகையை கட்டத் தவறினால் தலா 3 மாதங்கள் என கூடுதலாக 9 மாதங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
மேலும் திருடிய குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதில் 3 ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். திருட்டுக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை தனியே அனுபவிக்க வேண்டும். அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுலதாக 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து குற்றவாளி சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பையொட்டி கோர்ட்டு வளாகத்துக்கு போலீஸ் பாது ப்பு போடப்பட்டிருந்தது.
Average Rating