அவினாசி அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் கழுத்தை அறுத்து கொலை!!
அவினாசி வாணியர் வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கணவர், ஒரு மகன், ஒரு மகள் இறந்து விட்டனர். கண்ணன் என்ற மகன் தாலுகா அலுவலகம் அருகே கடை நடத்தி வருகிறார்.
தனியே வசித்து வந்த பத்மாவின் நடமாட்டம் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பத்மா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவினாசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் பீரோ திறந்து கிடந்தது. பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பத்மா அங்குள்ள கோவில் நிலத்தில் அருகே இட்லி கடை நடத்தி வந்ததும், அதனை காலி செய்ய தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
எனவே அவர் இட்லி கடை விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை, பணத்துக்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொலை நடந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating