கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!!
கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தச்சு தொழிலாளி.
இவரது மனைவி பிந்து (34). கோட்டயம் நகர சபையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவிலும் இதுபோல பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ராஜேஷ், அவரது மனைவி பிந்துவை அடித்து உதைத்தார்.
பின்னர் அவரை வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தள்ளினார். இதில் பிந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை கண்டதும், ராஜேஷ், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் தலையில் அடிபட்ட அவரை போலீசார் மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே கிணற்றில் தள்ளப்பட்ட ராஜேசின் மனைவி பிந்துவும் இறந்து போனார்.
இதையடுத்து போலீசார் ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating