நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை!!
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதுபற்றி சந்திப்பு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தற்கொலை செய்த வாலிபர் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் தற்கொலை செய்தவர் சந்திப்பு மீனாட்சிபுரம் மோதிலால் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன்(வயது 19) என்பது தெரிய வந்தது.
சுப்பிரமணியன் சந்திப்பில் பூ வியாபாரம் செய்து வருகிறார். முருகனின் தாய் இறந்துவிட்டார். இதனால் அவர் தந்தை சுப்பிரமணியன் பராமரிப்பில் இருந்து வந்தார். சுப்பிரமணியன் முருகனை தருவையில் உள்ள பாலிடெக்னிக்கில் சேர்த்து படிக்க வைத்தார். அவர் சரிவர படிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டில் கண்டித்தார்களாம்.
இதில் மன வேதனை அடைந்த முருகன் வாழ்க்கையில் வெறுப்படைந்து இரவு ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating