வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது!!
வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் கீதா என்ற 12 வயது பெண் காட்டுமாடு 9-வது முறையாக கடந்த 2-ந் தேதி காலை ஆண் கன்று ஒன்றை ஈன்றது. தற்போது பிறந்துள்ள கன்றின் தந்தை இந்த பூங்காவில் பிறந்து வளர்ந்த விஜய் என்ற 8 வயது ஆண் காட்டுமாடு ஆகும். தற்போது புதிதாக பிறந்துள்ள இந்த ஆண் கன்றுடன் சேர்த்து பூங்காவில் 9 ஆண் மற்றும் 8 பெண் என மொத்தம் 17 காட்டுமாடுகள் உள்ளன. தற்போது கன்று ஈன்றுள்ள தாய்க்கு சிறப்பு உணவுகளாக தேங்காய், கடலைப்புண்ணாக்கு, கொண்டைக்கடலை, வாழைப்பழம், கீரை, சுரைக்காய் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகிறது.
பூங்கா நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி தாயையும், கன்றையும் கண்காணித்து வருகிறது. இவை இயற்கை காடுகளில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா, லாவோஸ், சீனா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா, மியான்மர், இந்தியா, வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக பசுமை மாறா காடுகள், அரைகுறை பசுமை மாறாக்காடுகள், ஈர இலையுதிர் காடுகள் மற்றும் இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. தென் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமாக வாழ்கின்றன.
வயநாடு, முதுமலை மற்றும் பண்டிப்பூர் ஆகிய தேசியப்பூங்காக்களில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் காட்டுமாடுகள் காணப்படுகின்றன. வண்டலூர் பூங்காவில் இயற்கையான இருப்பிடங்களில் காட்டு மாடுகளின் பராமரிப்பு, இனப்பெருக்க மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் உணவூட்ட மேலாண்மை ஆகியவை சிறப்பாக மேற்கொண்டு வருவதால்தான் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Average Rating