குளச்சல் பிளஸ்–2 தேர்வு மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்வி அதிகாரி விசாரணை!!
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 83 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது.
குளச்சல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். தேர்வு அறையின் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர், அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவி சரிவர தேர்வு எழுத முடியாமல் தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த பள்ளிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரியை சந்தித்தும் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து முதன்மைக் கல்வி அதிகாரி ராதா கிருஷ்ணன், தக்கலை தொடக்கக்கல்வி அதிகாரி ஜேக்கப் அருள் மாணிக்கராஜை, இந்த பிரச்சினை தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தக்கலை தொடக்கக்கல்வி அதிகாரி இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அந்த பள்ளிக்கு சென்று பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், புகார் கூறிய மாணவி மற்றும் அந்த தேர்வு அறையில் தேர்வு எழுதிய மாணவிகளிடம் விசாரணை நடத்தி செவ்வாய்க்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating