பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிப்பு!!
அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களின் தலைநகராக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்தவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை அந்த காமுகன் உயிருடன் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பரேலி மாவட்டத்தின் சிரவ்லி பகுதியை சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் நேற்று மாலை வீட்டில் தனியே இருந்தபோது, உள்ளே நுழைந்த தேஷ்ராஜ் என்பவன் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான்.
இதை தடுத்த அந்தப் பெண் அவனது பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றாள். இதனால் ஆத்திரமடைந்த அந்த காமுகன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்தான்.
கதறித்துடித்த அந்தப் பெண்ணின் கூச்சலை கேட்டு விரைந்தோடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating