உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா (சிறப்புக் கட்டுரை)!!

Read Time:18 Minute, 52 Second

timthumb (1)உலகமகளிர் தினம் 2015 -நோர்வே நக்கீரா
தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள்.

இம் முறையாவது பெண்கள் தினம் எதற்காக, எப்போது உருவானது என்பதையும் இது தோன்றியதன் காரணத்தையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்ப்போம்.

ஆண்களுக்கெதிரானது அல்ல….

உலகமகளிர் தினத்தில் அதிகமாகப் பேசப்படும் சொற்பதங்கள் பெண்ணியம் பெண் விடுதலை, ஆணாதிக்கம், சமவுரிமை, அடக்குமுறை என்பனவாகும். இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பலர் புரிந்து கொண்டதில்லை. இதை ஒரு கொண்டா ட்டம் போல் எண்ணுபவர்கள் பலருண்டு.

இது ஆண்களுக்கு எதிரானது, ஆண்களுக்கு எதிராகப் போராட வேண்டும், ஆண்கள் போல் எமக்கு உரிமைவேண்டும், ஆண்கள் மாதிரி நடக்கவேண்டும் என்ற உணர்வுகளுடன் கொண்டாடுபவர்களை நாம் பார்த்திரு க்கிறோம். இதுவல்ல உலகமகளிர் தினத்தின் நோக்கமும் குறியீடும்.

பெண்கள் தமது உரிமைகளை முன்வைக்கும் போது அதிகாரவர்க்கம் அதைமறுத்தும், எதிராகவும் நடந்து கொண்டது. அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆண் ஆதலால் ஆண்களுக்கு எதிராகவே போராடவேண்டி இருந்தது. அதற்காக போராட்டமானது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.

கறுப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையரான ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடியிருக்கிறார்கள். இதேபோல் பெண்களின் கோரிக்கைகளுக்கு உடன் நின்ற பல ஆண்களும் இருந்திருக்கிறார்கள்.

இப்பெண்களின் போராட்டம் ஆண்களால் கட்டப்பட்ட கட்டுமைப்புக்கும், மனநிலைக்கும் எதிரானது என்பதே பொருத்தமா னது. இந்த பெண்களின் மீதான அடக்குமுறை எப்படி உருவானது என்பதை அறிய மனிதன் மிருகமாக இருந்தகாலத்தில் இருந்து ஆய்வுகள் தொடங்கப்படவேண்டும்.

எதற்காக போராட்டம்….

1857ற்கும் அதற்கு முன்னரும் போர்களால் ஆண்களே அழிவைச் சந்தித்தனர். இதன் காரணமாக பெண்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வேண்டி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாயினர். ஆலைகள், நிலக்கரிச்சுரங்கங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றபோதும் வேலையின் இவர்கள் அதிக பழுக்களைச் சுமக்க வேண்டியவர்களாகவும் குறைந்த ஊதியத்தையே கொண்டவர்களாகவுமே இருந்தனர்.

தொழிற்சாலைகளில் 25சதவீதமான பெண்கள் 75சதவீதமான ஆண் களுடன் வேலைபார்க்கும் போது அடக்குமுறைக்கும், சீண்டல்களுக்கும், ஏளனங்களுக் கும், வல்லுறவுகளுக்கும் உள்ளாயினர். சமவுரிமையும், சமவாய்ப்புக்களும், சமஊதியமும் மறுக்கப்பட்டன.

இவர்களுக்கு ஆரம்பக்கல்வி, மருத்துவம், வாக்குரிமைகள் அனைத்தும் எட்டாக் கனிகளாகவே இருந்தன. இவர்கள் வீட்டுவேலைக்காரியராகவும் பிள்ளைப்பேறும் இயந் திரங்களாகவுமே மதிக்கப்பட்டனர்.

வாக்குரிமை என்பது கருத்துரிமை என்பதே ஏற்புடையது. ஆக பெண்களின் கருத்துரிமை மறுக்கப்பட்டது என்பதே சரியானது. இந் நிலையில்தான் பெண்கள் போராடவேண்டிய காலகட்டத்துக்குள் தள்ளப்பட்டனர்.

இலங்கையில்…

உலகின் முதற்பெண் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா என்பதும், ஐரோப்பிய அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரே இலங்கையில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பது பெருமைக்குரியதானாலும் அதை சரியாக நடைமுறைப்படுத்தும் கலாச்சாரப் பொறிமுறை போதாது என்பதே எனது கருத்து.

மேல்மட்ட, நடுத்தரவர்க்க பெண்களுக்கு இருந்த இவ்வுரிமைகள் கீழ்தட்டு மக்களுக்கு வளங்கப்படவில்லை என்பது மறுக்க முடியாதது. இதற்கு சமூக, கலாச்சார வர்க்க சாதியப்பாகுபாடுகளும் காரணமாயின.

போராட்டம்….

8ம் திகதி பங்குனிமாதம் 1857ல் அமெரிக்காவிலுள்ள நியூயோக் மாகாணத்தில் ஆடை ஆலைகளில் பணிபுரிந்த பெண்கள் ஒன்று திரண்டு அதிகவேலைச்சுமை குறைந்த ஊதியம் என்பவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

அந்தப்போராட்டம் அதிகாரபீடங்களின் உதவியுடன் நசுக்கப்பட்டது. பெண்கள் போராட்டம் அடக்கப்பட்டு விட்டது என்று கனவு கண்டு கொண்டிருக்கும் வேளை அக்கினி குஞ்சுகளாய், அனல்பிளம்புகளாய், நீறுபூர்த்திருந்த நெருப்புக்களாய் பெண்களின் உணர்வுகள் உரிமைகோரி மீண்டும் உயிர்பெறத் தொடங்கின.

இந்த நீறுபூர்த்த நெருப்புக்கள் அமெரிக்காவில் மட்டுமல்லாது ஐரோப்பா, இரஸ்யா எங்கும் வேராடி விழுதுவிட்டு எரியத் தொடங்கின. பெண்களைப் புறம்தள்ளி தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையை எட்டின.

1907ல் மகளிர் போராட்டம் உக்கிரமாக தலை தூக்கியது. ஐரோப்பா, இரஸ்யா அமெரிக்கா எங்கும் இப்பெண்கள் போராட்டம் ஆண்களின் அதிகாரவர்க்கத்தால் மீண்டும் அடக்கப்பட்டது.

உலகமகளிர் தினம் அங்குரார்பணம்…

1910ல் டென்மார்க்கில் பெண்களின் உரிமைக்கான மகாநாடு கூட்டப்பட்டது. உலமெங் கணும் உள்ள பெண்கள் அமைப்புக்கள் ஒன்று கூடினர். இந்த மகாநாட்டில்தான் உலகமகளிர்தினமாக அமெரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட முதற்போராட்டத்தை நினைவுகூரும் அல்லது மையப்படுத்தும் முகமாக பங்குனி 8 இரஸ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலனரா முன்மொழியப்பட்டது. இந்நாளே மகளிர்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது

இத்தினம் 1921ல்தான் இது மிகக்கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இது 105 வருடங்களாகக் கொண்டப்பட்டு வந்தாலும் ஒரு சிலஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இத்தினம் அறிமுகமானது. இன்னும் பல இஸ்லாமியநாடுகளில் இப்படி ஒரு தினம் இருப்பதாகவே அறியப்படவில்லை என்பது படுவேதனைக்குரிய விடயமாகும்.

சமவுரிமைப் போராட்டம்…

சமவுரிமை, பெண்விடுதலை என்பன புலத்தில் பலரால் குருட்டுக் கண்களாலேயே பார்க்கப் படுகிறது. இது இலவசமாகக் கிடைத்ததன் காரணமாகவே என்னவோ துர்பிரயோகமும் செய்யப்படுகிறது. இதற்கான விலையை அன்று பலர்பெண்கள் கொடுத்து ள்ளனர் என்பது குறித்தற்குரியது.

உரிமை இருக்கு என்தற்காக சிறுபிரச்சனைக்கும் விவாகரத்துக் கேட்டு குடும்பங்களைப் பிரிக்கும் முயற்சியில் பெண்ணியவாதிகள் ஈடுபட்டமை வருந்துதற்குரியதே.

சமவுரிமை என்றாலும் சரி பெண்ணுரிமை என்றாலும் சரி அது குடும்பங்களை சீர்பெற ஊக்குவித்து பெண்களின் குடும்பப்பழுக்களை குறைக்கும் நோக்காக அமையவேண்டும். ஆண்களுக்கு பெண்ணின்நிலையை புரியவைப்பதும் அதனூடாக குடும்பத்தை ஸ்திரமாக்கி நிறுவுவதும் சமவுரிமை பெண் ணுரிமைப்போராட்டங்களின் நோக்காக அமைய வேண்டும்.

சமவுரிமை என்பது ஆண்களைப்போன்று நடப்பது ஆண்களின் கெட்ட பழக்கங்களில் உரிமை கோருவது என்று ஆகாது. ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சமவாய்ப்புக்கள் பெண்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக ஆண்களின் தீயபழக்கங்களிலும் சமவுரிமை வேண்டும் என்பது வேடிக்கைக்குரியதாகும். உ.ம்:- ஆண்கள் மதுவருந்துகிறார்கள் புகைக்கிறார்கள் என்தற்காக அதிலும் உரிமை வேண்டும் என்று போராடுவது பெண்ணுரிமைப் போராட்டத்தின் நோக்கத்தை பெண்களே நசுக்குவதாக அமையும்.

பெண்ணின் உடலில் இயற்கையின் படைப்பில் நீர்தன்மை அதிகம் காரணம் இனப்பெருக்கம் (பிள்ளைப்பேறுதலுக்காக தேவை). இதனால் மதுவின் தாக்கம் அவர்களுக்கு மிக மிக அதிகம். ஒரு குப்பியுடனே கவிண்டு விடும் சந்தர்ப் பங்களில் கற்பிணியாக்கப்பட்டவர்களும் வேண்டா உறவில் கர்ப்பமும் நாம் நாளுக்கு நாள் கேட்கும் சம்பவங்களாகி விட்டன. இந்த மது என்பது ஆணாதிக்கத்திற்கு ஊட்ட ச்சத்தாக அமைந்துவிடுகிறது. இருவரும் மதுபோதையில் இருந்தார்கள் என்று ஆண் மன்னிக்கப்படுகிறான்.

இது போன்றதே புகைத்தலும். பெண்களின் புகைத்தலால் ஏற் படும் படிவுகள் எக்காலத்திலும் குழந்தைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கி அவளின் பரம்பரை நாசத்தையும் ஏற்படுத்துகிறது. இதை சமவுரிமைப்போரட்டுமே பெண்ணுரிமைப் போராட்டமோ ஊக்குவிக்காது.

இவை பெண்விடுதலையின் பக்கவிளைவுகள் என்றே பார்க்கவேண்டியுள்ளது. தெரிவு பெண்களுடையதாக இருப்பது தவறில்லை அது பரம்பரை சமூகப்பாதிப்புக்குரியதாக இருத்தலாகாது.

பாதுகாப்பை அளிக்கவேண்டியவர்கள் ஆண்கள் என்ற நிலைமறந்து தப்பிக்கொண்டவர் களாக பக்கவிளைவுகளை நுகர்வோர்களாக ஆண்கள் மாறிவருவது பெண்விடுத லையைக் கொச்சைப்படுத்துவதாகவும் மனிதநேயத்தை மறுப்பதாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.

புலத்துப் பெண்களின் நிலத்தின் தாக்கங்கள்…

இன்றைய பொருளாதரா நெருக்கடிகளைச் சமாளிக்கும் முகமாக பெண்களும் சரி சமமாக வேலைக்குப்போக வேண்டியவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் வீட்டு வேலை குழந்தை பராமரிப்பு என்னவற்றில் பங்கெடுக்க வேண்டிய நிலையில் ஆண் கள் உள்ளனர். இது பலவிடங்களில் தவிர்க்கப்படுகிறது.

அன்று எமது மூத்தகுடியினர் ஆண் வேட்டைக்குப் போய் போரிட்டு களைத்து உணவு கொண்டுவர பெண் சமைத்து பிள்ளைகளையும் பார்த்தாள். இன்று ஆண்களின் பொறுப்பான பொருளாதாரச் சுமைக்கு தாக்குபிடிக்க முடியாது போகையில் பெண்களே முண்டு கொடுத்துத் தாங்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

ஆனால் பெணகள் பாரம்பரியாமாக செய்து வந்த சமைப்பது பிள்ளைபராமரிப்பது போன்ற தொழில்களை ஆண்கள் தரக்குறைவாக எண்ணித் தன்வீட்டிலேயே செய்வதில்லை.

புலத்தில் எம்பெண்கள் பலர் வேலைக்குப்; போய்வந்து சமையலும் செய்து பிள்ளைக ளையும் கணவனையும் பராமரிக்கும் நிலையில் உள்ளார்கள். இவிரட்டை நிலையில் ஆண்கள் சுகம்காண்கிறார்கள். அதேவேளை பல ஆண்கள் பெண்களைவிட சமைய லில், பிள்ளைபராமரிப்பதில் திறமையானவர்களாக இருப்பது பெருமைக்குரியதே.

பெண்விடுதலை பெண்ணியம்….

பெண்ணியம்காக்கவோ பெண்விடுதலைக்காகவோ பெண்கள்தான் போராட வேண்டும் என்பதில்லை. இதற்கு ஆண்களின் பங்களிப்பும், புரிதலும் இருந்தாலே பெண்ணியமும் பெண்விடுதலையும் வெற்றி கண்டுவிடும். பெண்கள் ஆண்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்லர்.

படைப்பின் தத்துவமே ஒருவருடன் மற்றவர் இணைந்துதான் வாழ வேண்டும் என்றிருக்கிதே. படைப்பில் பெண் உடல், உணர்வு ரீதியாகப் பலவீனமா னவர்களாகவும் உள்ளரீதியாக பலமானவளாகவுமே படைக்கப்பட்டுள்ளாள்.

இந்த இயற்கையின் நியதி மாற்ற முடியாது. ஒரு பெண்ணை பெண்ணாக அவளின் பலவீனங்களுக்குப் பலமாக ஆண்களை உருவாக்குவதிலேயே பெண்ணுருமையின் முழுவெற்றியும் தங்கியுள்ளது.

ஆண்கள் பெண்களைப் பலம், பலவீனங்களைப் புரிந்து, அறிந்து கொள்வதன் மூலமாகவே சமவுரிமை, பெண்விடுதலை பெண்ணுரிமை என்பன சாத்தியப்படும் என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு பெண் பூப்பு எய்துவதற்கு முன்னரே அவள் தாய்மைக்காகத் தயார்படுத்துப்படுகிறாள்.

இது ஒரு வேதனை வெட்கம் வலி கொண்ட ஒர் உணர்வுப் போராட்டம் என்பது எத்தனை ஆண்களுக்குத் தெரியும்? நாம் ஒரு திறந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் பெண்களைப்பற்றிய அறிவுரீதியாக நாம் மூடப்பட்டே உள்ளோம்.

மாதம் மாதம் அவர்களினுள் நடக்கும் மாற்றங்கள் என்ன? உணர்வு போராட்டங்கள், உடல்மாற்றங்கள் என்ன என்பன பற்றிய தனிமையான படிப்பும் அறிதலும் ஆண்களுக்கு அவசியம் என்பது என்பது எனது முன்மொழிவு.

எமது பெற்றோர் பாட்டன் பீட்டனுக்கு பெண்கள் ஆண்கள் போன்றவர்கள் ஆனால் மென்மையானவர்கள் என்பது மட்டுமே புரியும். வைத்தியசாலை சென்று மலசலம் கழிப்பதுபோல் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வருகிறார்கள் என்றே எண்ணுவார்கள். அதன் வலி பேதனைகளை பார்தது கூட இல்லை.

3, 3.5கிலோ அரிசியை அல்லது பொருளை வயிற்றில் கட்டிக்கொண்டு எத்தனை மணித்தியாலங்கள் இருக்க முடியும் என்று கேளுங்கள்? அத்துடன் பிள்ளை வெளியே வருவதற்கான தயாரிப்புகளில் பெண்ணுடல் வலுவிழந்து கொண்டிருக்கும் என்பதையும் அறியார்கள்.

பிள்ளைப் பேற்றின் போது 32 எலும்புகள் முறியும் வேதனை ஒருதாய்க்கு இருக்கும் என்பதை அறிந்து கூறுகிறது விஞ்ஞானம்.

புலம்பெயர் நாடுகளில் பாலியல் படிப்பு 12வயதில் ஆரம்பித்தாலும் அதன் பிரதி பலன்கள் இன்னம் சரியா அமையவில்லை என்பது மிகவேதனைக்குரியது.

கடமை..

இந்த உலகமகளிர் தினத்தில் பெண்களை, அவர்களின் தன்மையை, வேதனைகளை, வலிகளை புரிந்து கொண்டு நடப்பதே பெண்ணியத்தின் வெற்றியும், எம்தாய்க்கும், எம்மைத் தந்தையாக்கிய பெண் தெய்வங்களுக்கும் செய்யும் அன்புப்பரிசுமாகும். ஆண்கள் பெண்களை புரிந்து, உணர்ந்து கொள்வதற்காக, எனது கடமையாக ஒரு காணொயை தருகிறேன்.

இங்கே பிள்ளைப்பேறின் போது ஏற்படும் வலி 32 எலும்புகள் முறிவதற்குச் சமமானது. இதை இரண்டு ஆண்கள் இலத்திரன் முனைகளில் அனுபவிக்கிறார்கள் பாருங்கள்.

இதைப் பார்த்து விட்டாவது உங்கள் தாயையும் மனைவியையும் ஒருதடவை முத்தமிடுவீர்களாயின் அது போதும் நீங்கள் அவர்களை புரிந்து கொள்ளத் தொடங்குகிறீர்கள் என்பதற்கு ஒரு ஆதராமாகும்

இணைப்பைச் சுடுக்கி காணொளியைக் காண்க… வாழ்க உலகமகளிர்…!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை காஜல் அகர்வால்- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
Next post மகனின் குழந்தைக்கு தாயாக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)!!