மன உளைச்சலால் தினம்தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: உபேர் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!!
டிசம்பர் 5, 2014. டெல்லியில் இன்னொரு கருப்பு தினம். உபேர் கால் டாக்சியில் பயணித்த 25 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்ட நாள். கோர்ட்டில் தன்னைக் கற்பழித்தவனைப் பார்த்ததும் இந்த பேய்தான் என்னைக் கற்பழித்தது என்று அலறிய அந்தப் பெண், தினம்தினம் மன உளைச்சலால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள அவரது வழக்கறிஞர் டக்ளஸ் விக்டர் மூலம் இன்று அவர் தெரிவித்த செய்திக்குறிப்பில், இந்த சம்பவத்திற்குக் காரணமான அமெரிக்காவைச் சேர்ந்த உபேர் நிறுவனம் தனது காயங்களை அவமதித்துவிட்டதாகவும், இந்தியாவில் தன் வியாபாரத்தை தொடர்வதற்காக தனது விதிமுறைகளில் மட்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் “பெண் தன்னை பாதுகாப்பாக உணராத வரை, நாம் நிச்சயம் சமத்துவத்தைப் பெற முடியாது. எனக்கு நடந்த கொடூரத்தை நான் மறக்க நினைத்தாலும் பல முறை குறுக்கு விசாரணையின்போது சொல்ல நேர்கிறது. நான் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தினம் தினம் மன உளைச்சளால் நரக வேதனையை அனுபவிக்கிறேன்” என்றார்.
பலாத்காரம் என்பது ஒரு பெண்ணின் உடல் சார்ந்து நிகழ்த்தப்படும் வன்முறை மட்டுமல்ல. அது அவளது மன நலத்தை பாதித்து, நடைபிணமாக மாற்றும் ஆகப் பெரிய வன்முறை என்பதே இவரது பேச்சில் நிரூபணமாகிறது.
Average Rating