செய்யாறில் அடுத்தடுத்து வீட்டின் கதவை உடைத்து 10 கிலோ வெள்ளி திருட்டு!!
செய்யாறு வெங்கடேஸ்வர நகரை சேர்ந்தவர் ராமானுஜுலு. இவர் சுகாதாரத்துறையில் கார் ஓட்டுனராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு ராமானுஜுலு நேற்று சென்றார். இன்று அதிகாலை ராமானுஜுலு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த ராமானுஜுலு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம், 2 விலை உயர்ந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ராமானுஜுலு செய்யாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் செய்யாறு புதிய காஞ்சிபுரம் சாலையை சேர்ந்தவர் டாக்டர் பாரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். டாக்டர் பாரி அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating