திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் பாலியல் புகார்!!
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டார்.
திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த உமா (வயது 28) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் வசித்து வருகிறேன். கடந்த 2006–ம் ஆண்டு சங்கர் என்பவருக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. வெண்ணிலா (8), தமிழரசி (6) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்கிறேன்.
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றேன். அப்போது அங்கு பணிபுரிந்து வரும் ஏட்டு, புகார் தொடர்பாக விசாரணை செய்ய வீட்டிற்கு வருவதாக கூறி போன் நம்பர் வாங்கினார்.
அதன் பின்னர் வீட்டிற்கு வந்து விசாரணை செய்தார். அப்போது அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். மேலும் என்னுடைய குழந்தைகளையும் காப்பாற்றுவதாக கூறினார்.
இதையடுத்து பல்வேறு இடங்களுக்கு என்னை அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். மேலும் என்னிடமிருந்து நகை மற்றும் பணத்தை செலவுக்காக வாங்கினார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை திருமணம் செய்யுமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் புகாரை பெற்று கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் என்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார்.
எனவே எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் எனது நகைகள் கிடைக்கவும், என்னை ஏமாற்றிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Average Rating