கோவையில் ரூ.2 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.4 லட்சம் மோசடி!!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் சியாம் சுந்தர்(வயது 35). இவர் தனது நண்பர்கள் மூலமாக கோவையை சேர்ந்த பாலமுருகன், ராகவனுக்கு அறிமுகமானார்.
சியாம் சுந்தர் தான் செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் வேண்டும் என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் தான் பால முருகன், ராகவனை கூறியிருக்கிறார்கள்.
அதன்படி சியாம்சுந்தர் கோவை வந்தார். இங்கு பாலமுருகன், ராகவனை சந்தித்தார். அவர்கள் இருவரும் சியாம்சுந்தரை கோவை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு அவர்கள் சியாம் சுந்தரிடம் ‘நாங்கள் உங்களுக்கு ரூ.2 கோடி கடன் வாங்கித்தருகிறோம். ரூ.2 கோடி என்பது எங்களுக்கு சாதாரணமான விஷயம்.
வங்கியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எளிதில் கடன் வாங்கி விடலாம்’ என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.
ஆனால் அதற்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்ய ரூ.4½ லட்சம் தேவைப்படும். அதை தந்தால் உடனே கடன் பெறுவதற்கான நடவடிக்கையை தொடங்கி விடலாம் என்று கூறினார்கள்.
இவ்வளவு சுலபமாக ரூ.2 கோடி கிடைக்கிறதே என நினைத்த சியாம்சுந்தர் தான் கொண்டு வந்திருந்த ரூ.4½ லட்சத்தை கொடுத்தார். பணம் கை மாறியதும் ‘நீங்கள் இங்கேயே இருங்கள். நாங்கள் வங்கியின் மானேஜரை சந்தித்து விட்டு உங்களை அழைத்துச்செல்கிறோம்’ என்று கிளம்பினார்கள். வெகுநேரமாகியும் இருவரும் வராததால் சியாம்சுந்தர் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
‘சுவிட்ச் ஆப்’ என்பதே பதிலாக வந்தது. நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்பதை அறிந்த சியாம்சுந்தர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாலமுருகன், ராகவனை தேடி வருகிறார்கள்.
Average Rating