விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விவசாயி தற்கொலை!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இளம்வயது விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஷேக்பூர் அஜீத் கிராமத்தை சேர்ந்த விவசாயியான திலிப் குமார்(35), ஏராளமான பணத்தை கடனாக பெற்று தனது நிலத்தில் பயிர் விவசாயம் செய்தார். சமீபத்தில் பெய்த பெருமழையின் விளைவாக உண்டான வெள்ளப்பெருக்கில் அவரது பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழுகிப்போனதால் திலிப் குமார் பெரும் கடன் தொல்லைக்குள்ளானார்.
சில நாட்களாகவே எதிலும் நாட்டமின்றி சோகத்துடன் காணப்பட்ட அவர், இன்று வீட்டில் இருந்த தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்துவந்த ஹத்ராஸ் ஜங்க்ஷன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திலிப் குமாரின் பிரேதத்தை பரிசோதனக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating