வளவனூர் அருகே தீக்குளித்த தாயை கட்டிப்பிடித்த 2 வயது குழந்தை கருகி சாவு: மற்றொரு குழந்தை படுகாயம்!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள உப்புமுத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 32), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி நதியா (26). இவர்களுக்கு கார்குழலி (6), தமிழரசி (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜீவ்காந்திக்கு குடிபழக்கம் இருந்தது. அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கவில்லை. நேற்று மாலை அவர், மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்–மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜீவ்காந்தி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதில் மனமுடைந்த நதியா தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். உடனடியாக அவர் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடலில் தீப்பற்றியது. இதை பார்த்ததும் குழந்தைகள் கார்குழலி, தமிழரசி ஆகியோர் ஓடி சென்று நதியாவின் கால்களை கட்டிப்பிடித்து கொண்டனர். அப்போது அவர்கள் மீதும் தீ பரவியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தமிழரசி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். நதியா மற்றும் கார்குழலி ஆகியோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் திருமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
Average Rating