அரியானா மாநிலத்தில் தலித் பெண் கடத்தி கற்பழிப்பு: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!
அரியானா மாநிலம் கெய்தால் மாவட்டத்தில் ஹார்சோவா கிராமம் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்காக அருகில் உள்ள கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கர்ஜிந்த் மாவட்டம் ரோப்கர் கிராமம் அருகே அவரது கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கார் நின்றதும், அந்த பெண்ணின் உறவினர்களையும் அடித்து உதைத்தனர். அப்போது, திடீர் என்று காரில் இருந்த பெண்ணை 6 பேர் கும்பல் இழுத்துச் சென்றது. பின்னர் அருகில் உள்ள வயல் பகுதிக்கு கடத்திச் சென்று கொடூரமாக கற்பழித்தனர்.
அந்த பெண் கதறி கூச்சலிட்டார். உடனே அந்த கும்பல், ‘‘இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம்’’ என்று அந்த தலித் பெண்ணை எச்சரித்து விட்டு ஓடி விட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலித் பெண்ணை கற்பழித்தவர்களில் 5 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்களில் கண்டீலா கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகர், மனோஜ், ஜிதிந்ரா, காலா, சந்தீலா ஆகிய 5 பேர் என அடையாளம் தெரிந்தது. மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் ஜார்வால் தெரிவித்தார்.
Average Rating