தாலி பிரச்சினையால் திருமணம் நடந்தது: வீட்டை விட்டு வெளியேறி மாலை மாற்றிய ஜோடி!!
தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் முரளிக்கும்(வயது 25), மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரம் என்பவர் மகள் வினோதினிக்கும்(21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்தனர். திருமண வேலைகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தாலி வாங்குவதற்காக இரு குடும்பத்தினரும் நகை கடைக்கு சென்றனர். மாப்பிள்ளை தேர்வு செய்த தாலியை பெண் வீட்டார் ஏற்க மறுத்தனர்.
நம் சமுதாயத்தில் இந்த தாலியை அணிய மாட்டார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தாலி வேறு சமுதாயத்திற்குரியது. எனவே நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். இதன் மூலம் நீங்கள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது என்றனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் திருமணம் தடைப்பட்டது.
தாலி பிரச்சனையால் திருமணம் நின்றதால் புதுமண ஜோடியான முரளி–வினோதினி அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவர்கள் தங்கள் பெற்றோர் முடிவை ஏற்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் நிலக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நிலக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருவரது குடும்பத்தாரையும் வரவழைத்து சமாதானம் பேச்சு நடத்தினர். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து போலீசார் மணமக்களை ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தனர்.
Average Rating