இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!
டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதிலும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி, இங்கிலாந்தைச் சேர்ந்த திரைப்பட பெண் தயாரிப்பாளர் லெஸ்லீ உத்வின் மற்றும் பி.பி.சி.–4 குழுவினர் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தனர்.
இதில், டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கின் பேட்டியும் இடம்பெற்றிருந்தது. குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டி முழுமையாக ஊடகங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் என்ற பெயரில் இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துள்ளார்.
இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் இந்த படத்தில் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர் என்கிறார் ஹர்வீந்தர் சிங். இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்கு காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
உலகம் முழுவதும் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இத்தகைய கொடூரத்தில் ஈடுபடும் நபர்களின் மனநிலை உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்றும் ஹர்வீந்தர் சிங் கூறியுள்ளார்.
Average Rating