திருச்சூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளித்து சாவு!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள கோழிகுலங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் அஸ்வதி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
நேற்று கோபி தனது மனைவியுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றார். தனியாக இருந்த அஸ்வதி வீட்டுக்கு தன்னுடன் படிக்கும் ஆண் நண்பரை அழைத்தார். அவரும் அஸ்வதியின் வீட்டுக்கு வந்தார். கதவை சாத்திவிட்டு தனியாக இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இதை கோபியின் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் சென்று அஸ்வதியிடம் வீட்டில் இருக்கும் மாணவர் யார் என்று விசாரித்தனர். இதனால் பயந்து போன அஸ்வதியின் நண்பர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உறவினர்கள் அஸ்வதியை எச்சரித்து விட்டு சென்றனர்.
வீட்டுக்கு அருகில் காத்திருந்த அஸ்வதியின் நண்பர் உறவினர்கள் சென்ற பின்னர் மீண்டும் யாருக்கும் தெரியாமல் அஸ்வதியின் வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு இருவரும் தனிமையில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த உறவினர்கள் அஸ்வதி தொடர்ந்து அந்த மாணவருடன் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்தனர். வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள் அஸ்வதியையும், அவரது ஆண் நண்பரையும் வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனால் அவமானமடைந்த அஸ்வதி அங்கிருந்து வீட்டுக்குள் புகுந்து அஸ்வதி மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொடுங்கலூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு உடல் கருகிய நிலையில் அஸ்வதி பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating