கிராம உதவியாளரை கன்னத்தில் அறைந்த வருவாய் ஆய்வாளர்: தாசில்தார் அலுவலகம் முற்றுகை!!
சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்துக்குட்பட்ட வீரபாண்டி வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ரவி. இவர் நேற்று பகல் 1 மணிக்கு நெய்க்காரப்பட்டியில் ஆய்வு நடத்த வந்தார்.
அப்போது நெய்க்காரப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முனுசாமியிடம் உதவியாளராக இருக்கும் இன்னொரு ரவியை சான்றிதழ் வழங்குவது குறித்து ஒரு வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்த அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.
தனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு உள்ளதால் வர முடியாது என்று அவர் கூறினார். இதனால் கிராம உதவியாளரை அவர் கன்னத்தில் அறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை கிராம உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் மாதையன். மாவட்ட தலைவர் முனுசாமி, செயலாளர் தங்கராஜ். வட்ட செயலாளர் பால்ராஜ், செயலாளர் கோபால் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் 30 பேர், கிராம உதவியாளர்கள் 50 பேர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் மகேஸ்வரனிடம் மனு கொடுத்தனர்.
கிராம உதவியாளர் ரவியை தாக்கிய வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். முன்னதாக அவர்கள் சாலை மறியல் செய்யவும் திட்டமிட்டு இருந்தனர்.
கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்ததால் அவர்கள் தாசில்தார் அலுவலக முற்றுகை போராட்டத்தையும் சாலை மறியல் போராட்டத்தையும் கைவிட்டனர்.
Average Rating