மதுரை வானொலி நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஊழியர் பிணம்: போலீஸ் விசாரணை!!
மதுரை திருமங்கலத்தில் உள்ள கற்பக நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் சரவணன் (வயது 33) திருமணமானவர். இவர் தனியார் வானொலி நிலையத்தில் ஒப்பந்த முறையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் உள்பட சில ஊழியர்கள் நேற்றிரவு சொக்கிகுளத்தில் உள்ள வானொலி நிலையத்திற்கு பணிக்கு சென்றனர். பணியில் இருந்த சரவணன் நீண்ட நேரமாக காணவில்லை.
இதை தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் வானொலி நிலைய வளாகத்தில் தேடி பார்த்தனர். அப்போது அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் சரவணன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 அடி ஆழமுள்ள தொட்டியில் சுமார் 4 அடி உயரமுள்ள தண்ணீரில் மூழ்கிய நிலையில் சரவணன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து சரவணனின் தந்தை ராஜூ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தரைமட்ட தண்ணீர் தொட்டியில் குறைந்த அளவுதான் தண்ணீர் உள்ளது. எனவே அதில் தவறி விழுந்து மூழ்கி மூச்சுத்திணறி சரவணன் இறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் பணியில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இறந்த சரவணனின் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2½ வயதில் அருண்ராஜ் என்ற மகன் உள்ளான். மகாலட்சுமி திருமங்கலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். கணவரின் பிணத்தை பார்த்து அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
Average Rating