மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி!!
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி அருகே உள்ள செக்கடிப்பட்டியை சேர்ந்தவர் சோமன். இவரது மகன் லட்சுமணன் (வயது21). இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்காக லட்சுமணன் தனது நண்பர் வீரசூடாமணி பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் மகன் ராகவேந்திரனையும் (19) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
விழா முடிந்து இரவு 10 மணி அளவில் 2 பேரும் ஊர் திரும்பினர். கொட்டாம்பட்டி–நத்தம் ரோட்டில் அவர்கள் வேகமாக வந்ததாக தெரிகிறது. எம்.வல்லாளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லட்சுமணன், ராகவேந்திரன் தூக்கி வீசப்பட்டனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் பள்ளப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்த நொண்டிச்சாமி (45) என தெரியவந்தது.
லட்சுமணன், ராகவேந்திரன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே கல்லூரி மாணவர் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.
மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராகவேந்திரன் இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், ஏட்டு அன்பு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating