திருப்பதியில் முடி காணிக்கை பக்தர்களிடம் பணம் வசூல்: நிர்வாக அதிகாரி இடமாற்றம்!!
திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்யாண கட்டாவிலும், விடுதி அருகே உள்ள மினி கல்யாண கட்டாவிலும் இலவசமாக முடி காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக ஷிப்டு முறையில் பணியாற்ற தேவஸ்தானம் சார்பில் நாவிதர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முடி காணிக்கைக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் நாவிதர்கள் பக்தர்களிடம் கட்டாயமாக பணம் வசூல் செய்வதாகவும் பணம் கொடுக்காதவர்கள் முடி காணிக்கைக்கு காத்திருக்க வைக்கப்படுவதாகவும் தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவ ராவுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து கல்யாண கட்டாவை கண்காணிக்க திருப்பதி இணை நிர்வாக அதிகாரி கோலா பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது, பக்தர்கள் கூறிய புகார் உண்மை கண்டு பிடிக்கப்பட்டது.
பக்தர்கள் கொண்டு வரும் டோக்கனை பெற்றுக்கொண்டு மொட்டை அடிக்க வேண்டிய நாவிதர்கள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக பணம் கொடுக்காதவர்களிடம் டோக்கனை பெற்று விட்டு கால தாமதப்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நாவிதர்களின் இந்த செயலால் கல்யாண கட்டாவில் பக்தர்கள் முடி காணிக்கைக்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நேற்று முன் தினம் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியது இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயம் அடைந்தனர்.
இதை கண்டுபிடித்த அதிகாரிகள் நாவிதர்களை பிடித்து விசாரித்தனர். சிலரை கையும், களவுமாக பிடித்தனர்.
நாவிதர்கள் கூறும் போது, ‘‘அதிகாரிகள் வற்புறுத்தியதால்தான் நாங்கள் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது’’ என்றனர்.
இதையடுத்து கல்யாண கட்டா உதவி நிர்வாக அதிகாரி கிருஷ்ணாரெட்டி அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பெண் நிர்வாக அதிகாரி (பொது) பேபி சரோஜா அந்த பணிக்கு நியமிக்கப்பட்டார்.
கண்டிப்புக்கு பெயர் பெற்ற பேபி சரோஜா நியமிக்கப்பட்டு இருப்பதால் கல்யாண கட்டா ஊழியர்கள் மற்றும் நாவிதர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
கல்யாண கட்டா நாவிதர்களை கண்காணிக்க ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்த போதிலும் ‘‘தில்லு முல்லு’’ நடப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Average Rating