நாகர்கோவில் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை!!
நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர், பிள்ளையார் காலணியை சேர்ந்தவர் லிங்கசாமி.
இவரது மகள் அஜிதா (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் பி.காம். 3–ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் சென்றுவந்தார். மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
இது போல நேற்றும் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என கேட்டனர். அதற்கு பதில் கூற மறுத்த அஜிதா, திடீரென வீட்டில் இருந்து அவசர, அவசரமாக கிளம்பி வெளியே சென்றார்.
சிறிது நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது கால்கள் தடுமாறின. தள்ளாடியபடி வந்த அஜிதா வீட்டின் முற்றத்தில் வந்ததும் அப்படியே வாந்தி எடுத்த படி மயங்கி விழுந்தார்.
இதை கண்ட பெற்றோர் பதறியடித்து ஓடி வந்தனர். அவர்கள் அஜிதாவை அப்படியே காரில் தூக்கிப்போட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அஜிதாவின் தற்கொலைக்கு காரணம் தெரியாமல் தவித்த பெற்றோர் இது பற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜபால், சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அஜிதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது வீட்டுக்கு சென்று அஜிதாவின் உடமைகள் மற்றும் புத்தகங்களை பரிசோதித்தனர்.
அப்போது ஒரு புத்தகத்தில் இருந்து கடிதம் ஒன்று கீழே விழுந்தது. அந்த கடிதத்திற்குள் வாலிபர் ஒருவரின் புகைப்படம் துண்டுதுண்டாக கிழித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் அந்த வாலிபர் பற்றியும், அவரை அஜிதா மனமார காதலித்த விபரங்களும் கூறப்பட்டு இருந்தன.
மேலும் அந்த வாலிபரும், அஜிதாவும் சந்தோஷமாக இருந்த நாட்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இவ்வாறு அன்பாக பழகிய அந்த வாலிபர் சமீப நாட்களாக அஜிதாவை உதாசீனப்படுத்திய விபரமும் அதில் காணப்பட்டது.
அஜிதாவை அந்த வாலிபர் புறக்கணித்ததாலேயே அஜிதா, தற்கொலை முடிவுக்கு சென்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த உருக்கமான கடிதத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அஜிதாவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று விசாரணையில் இறங்கினர். இதில் அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரிவந்தது.
இதையடுத்து போலீசார் அஜிதாவின் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating